24.12.10

விடுவிக்கப்படுவாரா பெரியார்?

 திருச்சி பெரியார் மாளிகையில் பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டிருக்கும் பெரியார் பயன்படுத்திய வேன். (வலது) பெரியார் கல்வி வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் 'பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன்'.

திருச்சியின் மையப் பகுதியான புத்தூரிலுள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறது அந்த வேன். உண்மையில் அது ஒரு வரலாறு. தந்தை பெரியாருடைய வரலாற்றின் ஓர் அங்கம்.
  அந்த நாள் 19.08.1973. தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பெரியாருக்காக வாங்கிய வேனை அவருக்கு வழங்க அவருடைய தொண்டர்கள் எடுத்த விழா அது. விழாவில், பெரியாரிடத்தில் தங்கத்திலான வேன் சாவியை அளித்தார் முதல்வர் மு. கருணாநிதி. பெரியார் வேனிலிருந்து இறங்காமலேயே உரையாற்ற ஏதுவாக படுக்கை, கழிப்பறை வசதிகள் அந்த வேனில் செய்யப்பட்டிருந்தன.  இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல அந்த வேனுக்கு வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு. பெரியார் 19.12.1973-ல் சென்னை தியாகராய நகரில் தன்னுடைய கடைசி உரையை நிகழ்த்தியதும் உரையின் பாதியிலேயே வலியால் வாய்விட்டு அலறியதும் அதோடு மரணப் படுக்கைக்குச் சென்றதும் அந்த வேனிலிருந்துதான். வரலாறு. குப்பையாகக் கிடக்கிறது.
  அதே திருச்சியின் சுந்தர் நகர்ப் பகுதியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது 'பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன்' (சர்வீஸ் என்றால், சோஷியல் சர்வீஸ் அல்ல; வாகனங்களுக்கான வாட்டர் சர்வீஸ்). நகரில் அதிகம் கல்லா கட்டும் நிலையங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.
  பெரியாரின் சொத்துகள் இன்றைக்கு எப்படியெல்லாம் பாதுகாக்கப்படுகின்றன; எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இரு சின்ன உதாரணங்கள் இவை.
பெரியார் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர் எனினும் தன்னுடைய சொத்துகளைச் செலவிட்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர் அல்லர்; மிக எளிமையான வாழ்க்கையை வரித்துக்கொண்டவர். அவர் சிக்கன வாழ்க்கை வாழ்ந்ததற்கும் சொத்துகளைப் பேணி பராமரித்ததற்கும் மூன்று காரணங்கள் உண்டு: 1. இந்தச் சொத்துகள் யாவும் தமிழ்ச் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும். 2. திராவிடர் கழகம் பொதுப்புத்தியை உடைக்கும் கருத்துகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல பொருளாதாரம் எந்தக் காலத்திலும் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. 3. இந்தச் சொத்துகளில் தொண்டர்களின் - பொதுமக்களின் நிதியும் இருக்கிறது. இந்தக் காரணங்களே பெரியார் இயக்கத்தின் பெயரில் சொத்துகளை வாங்கக் காரணமாக இருந்தன.
  ஆனால், இப்படியெல்லாம் பெரியார் பார்த்து பார்த்து சேர்த்த - பராமரித்த சொத்துகள் பலவும் விற்கப்படுகின்றன. குறிப்பாக, பெரியாருடைய எழுத்துகள் காப்புரிமை தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொடர்ந்த வழக்கில், "சொத்துகளுக்கான உரிமை கோரும் ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் அவை பொதுச் சொத்துகளாக -  மக்கள் சொத்துகளாகவே கருதப்படும்'' என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னர் இந்த விற்பனை முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகப் பெரியாருக்கு நெருக்கமாக இருந்த பலரும் கூறுகின்றனர்.
  பெரியாரின் வழக்குரைஞரான எஸ். துரைசாமியினுடைய கூற்றின்படி, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பேரூராட்சி, சின்ன கடைவீதியில் 1950-களில் பெரியாரால் வாங்கப்பட்ட இடம் (புல எண்: 183/1; பட்டா எண்: 53) இப்போது விற்கப்பட்டுவிட்டது.  இதேபோல, திருச்சி மாவட்டம், இடையாற்றுமங்கலம், மேலவாளாடி; சென்னை, ஷெனாய் நகர்; ஏற்காடு எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரியாராலும் பெரியாரின் தொண்டர்களாலும் வாங்கப்பட்ட சொத்துகள் பலவும் இப்போது விற்கப்பட்டுவிட்டன அல்லது அவற்றை விற்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.



                     திருவிடைமருதூரில் பெரியாருக்குச் சொந்தமான இடம் விற்கப்பட்டதற்க்கான பத்திரம்.



                             பத்திரத்தில் திராவிடர் கழகத் தலைவர் கே. வீரமணியின் கையெழுத்து, படம்.

தமிழகத்தில் சின்ன கிராமங்களில்கூட 'பெரியார் படிப்பக'ங்கள் இருக்கும். பெரியார் மீது கொண்ட மதிப்பினால் தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமான சொத்துகளை பெரியார் பெயரிலும் இயக்கத்தின் பெயரிலும் வாங்கினர். இந்தச் சொத்துகளில் பெரும் பகுதியானவை கைமாறிவிட்டன. எஞ்சியிருக்கும் பெரிய சொத்துகளும் முற்றிலும் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுகின்றன.
    உதாரணமாக, பெரியார் 'விடுதலை' பத்திரிகையை நடத்திய -  சென்னையில் அவர் வாழ்ந்த - சிந்தாதிரிப்பேட்டை, மீரான் சாகிப் தெருவிலிருந்த கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, இப்போது  'பெரியார் பிளாஸா'  என்ற பெயரில் வணிக வளாகமாக மாற்றப்பட்டுவிட்டது. பெரியார் தன் இறுதிக் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்த திருச்சி  'பெரியார் மாளிகை'  பல்வேறு நிறுவனங்கள் இயங்கும் இடமாக மாறிவிட்டது.
    இது ஒருபுறமிருக்க, பண மதிப்புக்கு அப்பாற்பட்ட -  இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பயன்பட வேண்டிய - பல தலைமுறைகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டிய  பெரியாரின் நினைவுகள் பொதிந்த அவருடைய சொத்துகள் -  அவருடைய எழுத்துகள், உரைகள், அவர் பயன்படுத்திய பொருள்கள் யாவும் அழிந்துகொண்டிருக்கின்றன.
   பெரியாருடைய எழுத்துகள், பேச்சுகள் சேகரிப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவரும்  'ஈ.வெ. ராமசாமி என்கிற நான்' நூலின் தொகுப்பாசிரியருமான பசு. கௌதமனுடைய   கூற்றின்படி, பெரியாருடைய பேச்சுகள் அடங்கிய ஒலிப்பேழைகளில் பெரும் பகுதியானவை அழிந்துவிட்டன. மிகச் சொற்பமான பதிவுகள் மட்டுமே தற்போது திராவிடர் கழகத்தின் வசம் இருக்கின்றன. அவையும் அரசியல் சூழல்களுக்கேற்ப பயன்படுத்துவதற்கு வசதியாக, அவர்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.
  திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 'விடுதலை' இதழில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் - விளம்பரங்களின்படி, பெரியார் நடத்திய 'குடிஅரசு' மற்றும் 'விடுதலை' இதழ்களின் பல ஆண்டு பிரதிகள் அவரிடத்தில் - திராவிடர் கழகத்தினிடத்தில் இப்போது இல்லை; குறிப்பாக 'குடிஅரசு'  இதழின் 8 ஆண்டுத் தொகுப்புகள் (1925 - 28; 1946 - 48) இல்லை. பெரியாருடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகளின் ஒரு பெரும் பகுதி -  இன்னும் அச்சேறாதவை - அவற்றின் கதி என்னவென்றே தெரியவில்லை.
  பெரியார் அணிந்திருந்த மரகதக் கல் மோதிரம் இப்போது நடிகர் சத்யராஜிடம் இருக்கிறது; திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் அன்புப் பரிசாக.
  "பெரியார் தொடர்பான அனைத்துக்கும் உரிமை கோரும் வீரமணியின் பொறுப்பில் பெரியாரின் எழுத்துகள், உரைகள், அவர் பயன்படுத்திய பொருள்கள் யாவும் இப்படித்தான் பாதுகாக்கப்படுகின்றன'' என்கிறார் கௌதமன்.
  "இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும்" என்கிறார் பெரியாருடன் மிக நெருக்கமாக இருந்தவரும் பெரியாரியல் சிந்தனையாளருமான வே. ஆனைமுத்து. குறிப்பாக, "பெரியாருடைய பேச்சுகளையும் எழுத்துகளையும் அரசு நாட்டுடைமையாக்க வேண்டும்'' என்று அவர் கோருகிறார்.
   "இவையெல்லாம் அரசுக்கும் முதல்வருக்கும் தெரியுமா; தெரியாதா? திராவிடர் கழகத்தை தன் குடும்ப வணிக நிறுவனம்போல மாற்றிவிட்ட கி. வீரமணியிடமிருந்து பெரியாருடைய படைப்புகளையும் அவருடைய நினைவுகள் பொதிந்த சொத்துகளையும் மீட்டு அரசே பராமரிப்பதை ஏன் இன்னமும் அரசு தவிர்க்கிறது?'' என்று கேட்கிறார் துரைசாமி.
    இந்தக் கேள்வி அவருடையது மட்டுமல்ல; பெரியார் மீது மதிப்பு கொண்ட ஒவ்வொருவருடையதும்கூட.
    இன்று (டிச. 24) பெரியார் நினைவு நாள். தந்தை பெரியார் மறைந்து 37 ஆண்டுகளாகியும் இன்னும் பெரியாருடைய படைப்புகளையும், அவர் தொடர்பான சொத்துகளையும் அரசு ஏன் நாட்டுமையாக்கிப் பராமரிக்காமல் தவிர்க்கிறது? இந்தக் கேள்விக்கு  தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து உருவானவர் என்று அடிக்கொரு தரம் கூறிக்கொள்ளும் தமிழக முதல்வரைவிடவும் பதிலளிக்க பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது. முதல்வரே, விடுவிக்கப்படுவாரா பெரியார்?
2010 தினமணி
 
 

Labels:

1 Comments:

Blogger Thamizhan said...

"பெரியார் அணிந்திருந்த மரகதக் கல் மோதிரம் இப்போது நடிகர் சத்யராஜிடம் இருக்கிறது; திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் அன்புப் பரிசாக.
"பெரியார் தொடர்பான அனைத்துக்கும் உரிமை கோரும் வீரமணியின் பொறுப்பில் பெரியாரின் எழுத்துகள், உரைகள், அவர் பயன்படுத்திய பொருள்கள் யாவும் இப்படித்தான் பாதுகாக்கப்படுகின்றன'' என்கிறார் கௌதமன்."

பெரியார் டிரஸ்ட் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?அந்த மோதிரம் எப்படி,எதற்காக சத்யராஜ் அவர்களுக்கு அளிக்கப் பட்டது தெரியுமா? ஒரு பதிவு எழுதுமுன் உரியவர்களிடம் கேட்டு உண்மை தெரிந்து எழுதுபவனுக்கும்,பத்திரிக்கை விபச்சாரம் செய்பவனுக்குமுள்ள வித்தியாசம் தெரியுமா?

December 25, 2010 at 7:26 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home