4.11.10

ஊழல் நமக்குப் பழகிவிட்டதா?


ரூ. 1763790000000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று எழுபத்தியொன்பது கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் கணக்கிட்டிருக்கும் தொகை இது.
    இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி -  ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு அதிகாரபூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மௌனம்?
  இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட 'சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இல்லை.
  தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறியே ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இல்லை.
  தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இல்லை.
  பிரச்னை நீதிமன்றப் படியேறியது. "நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இல்லை.
  அரசியல் நிர்ப்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்தியப் புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும் அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இல்லை.
  தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இல்லை.
  இந்த வழக்கின் விசாரணையில் மத்தியப் புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவியில் இன்னும் நீடிப்பது குறித்து கேள்வி எழுப்புகிறது. "அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேட்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இப்போதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இல்லை.
  ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று எழுபத்தியொன்பது கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08 நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்த தொகையைவிடவும் ஏறத்தாழ 20 சதம் அதிகமான தொகை இது.
  இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 7,05,516 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,76,379 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 35,275 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,763 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 14,69,825 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 35,275  கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.
  ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் பஞ்சப்பனாதைகளாக  வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்க குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?
  ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி  'நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடன் முடித்துக்கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக்கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஊழல் நம் எல்லோருக்கும் அவ்வளவு பழகிவிட்டதா?
அக். 2010  தினமணி
குறிப்பு: இந்தக் கட்டுரை அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ரூ. 1,39,652 கோடி தொகையை அடிப்படையாகக் கொண்டு  எழுதப்பட்டு,  நவம்பர் 3-ம் தேதி 'தினமணி'யில் வெளியானது. இந்நிலையில், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டை மூன்றாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத் தொகையுடன் ஒப்பிட்டு, இழப்பை ரூ. 1,76,379 கோடியாக தனது இறுதி மதிப்பீட்டில் குறிப்பிட்டிருக்கும் செய்தி நவ. 3 -ம் தேதி வெளியானது. இதையடுத்து, கட்டுரையில் புதிய மதிப்பீட்டுக்கேற்ப தரவுகள் மாற்றப்பட்டுள்ளன.    

Labels:

2 Comments:

Blogger நேசன் said...

ஆம், நாம் ஊழலுக்கு பழகி விட்டோம், நான் தமிழ்நாடு அரசு வேலையில் இருந்து விட்டு இப்பொழுது தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன், எங்கு பார்த்தாலும் மனிதர்கள் பொறுமையின்றி தங்கள் நேரத்தை காக்க அவசியமின்றி அரசு அலுவலகங்களில் பணத்தை கொடுத்து வேலையை முடித்து கொள்ள விரும்புகிறார்கள், இவர்களின் இதே செயல் பிற அரசு அலுவலகங்களிலும் அங்குள்ள ஊழியர்களிடமும் பரவி இப்பொழுது அவர்கள் வேலை செய்ய யோசிக்க கூட பணம் வேண்டுமென எதிர்பார்கிறார்கள்.

தனி மனிதர் திருந்தவுமில்லை, சட்டங்கள் கடுமையாக்கபடவும் இல்லை. இதில் அரசுக்கு இழப்பு ஏற்படுவதை பற்றியோ அல்லது அங்கு நடைபெரும் பணிகளின் தரம் பற்றியோ யாருக்கும் யோசிக்க கூட பொறுமையோ அக்கறையோ இல்லை, இதே ரீதியில் போனால் வெகு விரைவில் இந்தியா ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலைக்கு சென்று விடும்.

November 12, 2010 at 4:40 AM  
Blogger PB Raj said...

என்னத்த சொல்ல தட்டி கேட்டால் உருட்டு கட்டை வீட்டுக்கு வரும்

December 7, 2010 at 11:18 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home